ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தற்போது எட்டப்பட்டுள்ள 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக வரலாற்றிலேயே உருவாக்கப்பட்ட மிக விசித்திரமான மற்றும் ஆச்சரியமளிக்கும் இராஜதந்திர ஆவணமாகும்.
2026 பிப்ரவரி 28 அன்று 'ஒபரேஷன் எபிக் பியூரி' என்ற இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து தொடங்கியபோது அதன் இலக்குகள் மிகத் தெளிவாக இருந்தன.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நிரந்தரமாக அழிப்பது, அதன் ஏவுகணைத் தொழிலை முடக்குவது, பிராந்தியம் முழுவதும் உள்ள எதிர்ப்புப் குழுக்களுக்கான அதன் ஆதரவை இல்லாதொழிப்பது மற்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது. இந்தக் குறிக்கோள்களில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பிரசாரத்தின் ஆரம்ப மணிநேரங்களிலேயே ஈரானின் உச்ச தலைவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பாரம்பரிய கடற்படை பெருமளவில் அழிக்கப்பட்டது. அதன் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. வெற்று இராணுவ பலத்தின் அடிப்படையில் பார்த்தால், அமெரிக்கா போர்க்களங்களில் வென்றது.
ஆயினும் இந்த அமைதி ஒப்பந்தம் உண்மையில் என்ன சொல்கிறது என்று பார்க்கின்றபோது,
1.ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும், ஈரானின் இறையாண்மையை மதிப்போம் என்றும் அமெரிக்கா உறுதியளிக்கிறது
2.அமெரிக்காவின் ஆகச்சிறந்த அச்சுறுத்தல் ஆயுதமாக விளங்கிய கடற்படை முற்றுகை முற்றிலும் நீக்கப்படும்;
3.ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்படும்;
4.அனைத்து எண்ணெய் மற்றும் பெற்றோகெமிக்கல் தடைகளும் தற்காலிகமாக நீக்கப்படும்;
5.முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24பில்லியன் டொலர் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கும்;
6.அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானை மறுசீரமைப்பதற்காக குறைந்தபட்சம் 300பில்லியன் டொலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
'மறுசீரமைப்பு நிதி' என்பது ஒரு நாகரீகமான வார்த்தை. ஒரு இராஜதந்திரப் போர்வை, அவ்வளவுதான். தான் தாக்கிய நாட்டில் தான் அழித்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆக்கிரமிப்பாளர் பணம் செலுத்துவதை வரலாற்று அகராதியில் குறிப்பிட்ட சொல்லால் அழைப்பார்கள்.
அந்தச் சொல் 'போர் இழப்பீடு'. உலகப் போர் வரலாற்றில், தோற்றுப்போனவர்கள் மட்டுமே போர் இழப்பீடு செலுத்துகிறார்கள். நெப்போலியனின் போர்களில் இது தான் நடந்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஜேர்மனி இதைச் செலுத்தியது. 1945க்குப் பிறகு ஜப்பான் செலுத்தியது. குவைத் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஈராக் இதைச் செலுத்தியது.
இப்போது ஈரான் போருக்குப் பிறகு அதைச்செலுத்தும்படி அமெரிக்கா கேட்கப்படுகிறது. இந்தப் போரில் தோற்றது யார் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஒரே ஒரு உண்மை தேவை என்றால், அது இதுதான்.
மேலும் மிக முக்கியமாக—ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதிக்கள் போன்ற பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு அமைப்புகளுக்கான ஆதரவு ஆகியவை பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலிலிருந்தே முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைசி புள்ளியை சற்று நிதானமாக யோசிக்கின்றபோது, அமெரிக்கா இந்தப் போருக்காக 3மாதங்களில் உத்தியோகபூர்வமாக 30பில்லியன் டொலர்களை செலவழித்துள்ளது. தனது ஆயுதக் கையிருப்பைக் கடுமையாகக் குறைத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பொருளாதாரக் கண்ணோட்டத்தையே இருளடையச் செய்த ஒரு எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது. ஆனால் ஈரானின் ஏவுகணைகளும் அதன் புவிசார் அரசியல் கூட்டணிகளும் பேச்சுவார்த்தை மேசையிலேயே இல்லை.
இதுவொரு அமைதி ஒப்பந்தம் அல்ல. இது ஒரு சரணடைதல் ஆவணம். கடந்த 6வாரங்களாகவே நான் இதைத்தான் கூறி வருகிறேன். இதில் அமெரிக்கா கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் இதை 'முழுமையான வெற்றி' என்று கூறுவதிலிருந்து மாறி, ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி தான் என்று பெருமை பேசத் தொடங்கியதில் ஆச்சரியமேதுமில்லை. இந்த அவமானம் முழுமையானது.
சிறந்த அமெரிக்க மூலோபாயக் கோட்பாட்டாளர் எவரேனும் இருந்தால் இப்படிக் கேட்பார். இலக்குகளுக்கும் அதற்கான வழிமுறைகளுக்கும் என்ன தொடர்பு? உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தை இந்த அளவிலான ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி, ஒரு நாட்டின் தலைவரைக் கொன்று, வரி செலுத்துவோரின் 200 பில்லியன் டொலர் பணத்தைச் செலவழித்து, பாரசீக வளைகுடாவில் உள்ள பெரும்பாலான இராணுவ தளங்கள் ஈரானின் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டு, உலகளாவிய எண்ணெய் நெருக்கடியை உருவாக்கி—இறுதியில் அமெரிக்கா எதை அடைய நினைத்ததோ அதில் எதையுமே அடையாமல் அப்படியே திரும்புவதாகிவிட்டதா என்ற கேள்வியும் உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் கசிந்த ஒரு மதிப்பீடு உண்மையை வெளிப்படுத்துகின்றது. தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பே ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பில் பெரும்பகுதியை மாற்றிவிட்டது. நிலத்தடி வசதிகள் தகர்க்கப்படவில்லை.
அணுசக்தித் திட்டம் பல ஆண்டுகள் அல்ல, சில மாதங்கள் மட்டுமே பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திறன்களை தான் 'முழுமையாக அழித்துவிட்டதாக' ட்ரம்ப் உலகிற்குச் சொன்னார். ஆனால் மாறுபட்ட பார்வையும் உள்ளது.
இதுதான் போலிப் பரப்புரைக்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசமாகும். உலக நாடுகள் இப்போது அமெரிக்கா இந்த இடைவெளியை எப்படிக் கடக்கப் போகிறது என்பதை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதை வியட்நாம் போருடன் ஒப்பிட்டுப் பார்கின்றபோது, பல ஆண்டுகால தரைப்போர், 58,000 பேரின் மரணம் மற்றும் ஒரு தலைமுறையின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வியட்நாமில் தோற்றது.
ஆனால் ஈரானில் நடந்தது மூலோபாய ரீதியாக மிக மோசமானது மற்றும் மிகவும் அவமானகரமானது. இது 100 நாட்கள் நீடித்த ஒரு அதிநவீன வான்வழிப் போர். அமெரிக்கா தனது மிகவும் ஆபத்தான, தொழில்நுட்ப ரீதியாக மிக உயர்ந்த, கட்டுப்பாடற்ற பலத்தைக் காட்டிய தருணம். பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், விமானம் தாங்கி கப்பல் குழுக்கள், உலகின் மிகச் சிறந்த துல்லியமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் ஈரானோ தாக்கப்பட்டு, தடைகளுக்குள்ளாகி, முற்றுகையிடப்பட்ட நிலையிலும்—அமெரிக்கக் கழுகின் கண்களை நேராகப் பார்த்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடி, 7 நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கிவிட்டு அமைதியாகக் காத்திருந்தது.
ஈரான் இராணுவ ரீதியாக வெல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை. அது அரசியல் ரீதியாகத் தோற்காமல் இருந்தாலே போதுமானதாக இருந்தது. அதையே அது செய்தது. இந்த ஒப்பந்தம் ஈரானின் நியாயத்தை நிரூபித்துள்ளது. இஸ்லாமியக் குடியரசு தனக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் மத்தியிலும் தனது இறையாண்மை உறுதிப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டு எழுச்சி பெற்றுள்ளது.
அதன் மறுசீரமைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரம் திறக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் மூலோபாயத் திட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களோ, தங்களின் அனைத்து இடி முழக்கங்களுக்கும் பிறகு, எப்பொழுது வீட்டிற்குப் போவோம் என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும், அமெரிக்க ஆதிக்கத்திற்கும் என்ன அர்த்தம் தருகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த 7 தசாப்தங்களாக, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஒரேயொரு தாரக மந்திரத்தின் அடிப்படையிலேயே நிலைத்திருந்தது: அமெரிக்காவால் தனது இராணுவ பலத்தின் மூலம் தனக்குத் தேவையான விளைவுகளைக் கட்டாயப்படுத்திப் பெற முடியும் என்பது தான் அது.
ரியாத்தின் ஒவ்வொரு ஆட்சியாளரும், அம்மானின் ஒவ்வொரு அரசாங்கமும், கெய்ரோ, அங்காரா மற்றும் டெல் அவிவ் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு கணக்கீடும் இந்தத் தாரக மந்திரத்தின் நிழலில் தான் எடுக்கப்பட்டன.
கத்தாரில் உள்ள அல் உதைத், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அமெரிக்காவின் பரந்த இராணுவத் தளங்கள் வெறும் தளவாடச் சொத்துக்கள் மட்டுமல்ல. அவை அமெரிக்க விருப்பத்தின் நேரடி வடிவங்கள். 'நாங்கள் இங்கே இருக்கிறோம், நாங்களே தீர்மானிக்கிறோம்' என்று அவை பிரகடனப்படுத்தின.
அந்தக் கோட்பாடு இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டது. அந்தத் தளங்கள் இன்னும் இருக்கலாம் இல்லாது போனால் பாதிக்கப்பட்டும் இருக்கலாம். அதேபோன்று போர்க்கப்பல்கள் இன்னும் பயணிக்கலாம். ஆனால், தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரு அமைதி ஒப்பந்தத்தைப் பேச்சுவார்த்தை மூலம் பெற்று, தன்னைத் தாக்கியவரிடமிருந்து 300 பில்லியன் டொலர் போர் இழப்பீட்டுப் பங்கையும் பெற்ற பிறகு, அந்த இராணுவத் தளத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? ஆதிக்கத்தின் உள்கட்டமைப்பு எஞ்சியிருக்கலாம். ஆனால் அதற்கு அர்த்தம் கொடுத்த நம்பகத்தன்மை போய்விட்டது.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!